யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்?
என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.
எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.
என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.
உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; நீரே எனக்கு உதவி செய்பவர்; என்னுடைய இரட்சிப்பின் தேவனே, என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.
என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.