Chapter 26 of 150

சங்கீதங்கள்26

யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.

உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.

ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.

யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.

என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.

அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.

நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும்.

என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.

சங்கீதங்கள் 26 · KJV Audio
0:00
0:00