யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.
என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)
உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே?
ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.