வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.