தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.
தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி; மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர்.
அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால், உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது.
உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம்.
எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், பழிப்புகளுக்கும் வைக்கிறீர்.
இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை.