யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த கோபுரமும், எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.
உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர்.
எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது.
என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது.
என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள்.
என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.
நீதிமானுக்கு விரோதமாகப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது!
மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் யெகோவா தற்காத்து, வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார்.