என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், பதில் கொடுக்கவில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.
நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர்.
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர்.
தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூசியிலே போடுகிறீர்.
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும் .
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.
மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
பூமியின் செல்வந்தர் அனைவரும் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே.