Chapter 144 of 150

சங்கீதம்144

1

என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, அவர் என் கைகளை யுத்தத்திற்கும், என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.

2

அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை, என் அரண், என் மீட்பர், அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம், நாடுகளை அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.

3

யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும், வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்?

4

மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்; அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன.

5

யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்; மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும்.

6

மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்; உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும்.

7

உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்; பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும் என்னை விடுவித்துத் தப்புவியும்.

8

அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன; அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன.

9

இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்; பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன்.

10

ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.

11

கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்; பொய்பேசும் வாய்களையும், வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.

12

அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில் நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்; எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள்.

13

எங்கள் களஞ்சியங்கள் சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்; எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும், பதினாயிரக்கணக்கிலும் பெருகும்.

14

எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்; எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை, கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை; எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை.

15

இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சங்கீதம் 144 (tam_tcv) — EdenLecta