Chapter 31 of 31

நீதிமொழிகள்31

1

ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:

2

என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே,

3

பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.

4

திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

5

மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

6

மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;

7

அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.

8

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் உன்னுடைய வாயைத் திற.

9

உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.

10

குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.

11

அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது.

12

அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்.

13

ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.

14

அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.

15

இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

16

ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

17

தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.

18

தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.

19

தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.

20

சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.

21

தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.

22

இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.

23

அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான்.

24

மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.

25

அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.

26

தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.

27

அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.

28

அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:

29

அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.

30

செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.

31

அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.

நீதிமொழிகள் 31 (tam_irv) — EdenLecta