Chapter 12 of 27

லேவியராகமம்12

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு பெண் கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாய் உள்ள பெண் விலக்கமாக இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாட்கள் தீட்டாயிருப்பாள்.

எட்டாம் நாளிலே அந்த குழந்தையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படக்கடவது.

பின்பு அவள் முப்பத்துமூன்று நாட்கள் தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான யாதொரு பொருளைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது.

பெண்குழந்தையைப் பெறுவாளென்றால், அவள், இரண்டு வாரங்கள் மாதவிடாய் உள்ள பெண்ணைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறு நாட்கள் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருப்பாளாக.

“அவள் ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின்பு, அவள் ஒருவயதுடைய ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.

அதை அவன் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள்.

ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஏதாவது ஒன்றை சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல்” என்றார்.

லேவியராகமம் 12 · KJV Audio
0:00
0:00