சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது.
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் உணர்வில்லாமல் இருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைக் கைவிடமாட்டார்.
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது?
உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.
எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்;
அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.
நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; அநீதி காணப்படாதிருக்கும்; திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.