Chapter 17 of 42

யோபு17

1

என் ஆவி உடைகிறது , என் ஆயுசு நாட்கள் முடிகிறது; கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

2

கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.

3

தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைக்கப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

4

நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

5

எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

6

மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.

7

இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.

8

சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

9

நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

10

இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.

11

என் நாட்கள் முடிந்தது; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.

12

அவைகள் இரவைப் பகலாக்கியது; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.

13

அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

14

அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

15

என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

16

அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.

யோபு 17 (tam_irv) — EdenLecta