ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன்” என்றார்.
இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும்.
உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.
நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்” என்றார்.
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என்னுடைய உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் அனைத்து ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்;
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
உங்களில் தலை முறை தலை முறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் சந்ததியல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு வாங்கப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.
உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், விருத்தசேதனம் செய்யப்படவேண்டியது அவசியம்; இப்படி என்னுடைய உடன்படிக்கை உங்கள் சரீரத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கவேண்டும்.
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான் ” என்றார்.
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும்.
நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு மகனையும் தருவேன்; அவள் தேசங்களுக்குத் தாயாகவும், அவளாலே தேசங்களின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: “100 வயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? 90 வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
அப்பொழுது தேவன்: “உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாக உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாயாக; என்னுடைய உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் செய்வேன்; அவன் பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களைப் பெறுவான்; அவனைப் பெரிய தேசமாக்குவேன்.
வருகிற வருடத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடு நான் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார்.
அப்பொழுது ஆபிரகாம் தன் மகனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டில் பிறந்த அனைவரையும், தான் பணத்திற்கு வாங்கிய அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லோரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்த நாளிலேயே விருத்தசேதனம் செய்தான்.
அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 13 வயதாக இருந்தான்.