பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாயிலின் அகல அளவு.
வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்பக்கத்தில் ஐந்து முழமும் அந்தப்பக்கத்தில் ஐந்து முழமுமாக இருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் நிலைத்தூண்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.
பின்பு அவர் தேவாலயத்தின் முன்பக்கத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.
பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுசுவரின் அகலத்தை நான்குமுழமாகவும் அளந்தார்.
இந்தப் பக்கஅறைகள் அருகருகே, வரிசைகளாக முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் இணைந்திருக்காமல், பக்கஅறைகளுக்காகச் சுற்றிலும் அவைகள் இணையும்படி ஆலயத்திற்கு பக்கத்தில் இருந்த ஒட்டுச்சுவரிலே இணைந்திருந்தது.
உயர உயரச் சுற்றிலும் பக்கஅறைளுக்கு அகலம் அதிகமாக இருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாக இருந்தது; ஆதலால் இப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாக மேல்நிலைக்கு ஏறும் வழி இருந்தது.
மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், பக்கஅறைகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழம்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாக இருந்தது.
வெளியே பக்கஅறைகளுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாக இருந்தது; ஆலயத்திற்கு இருக்கும் பக்கஅறைகளின் மாளிகையிலே வெறுமையாக விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.
பக்கஅறைகளினுடைய வாசல்நடைகள், வெறுமையாக விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாக விட்டிருந்த இடங்களின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது.
மேற்கு திசையிலே தனிப்பட்ட இடத்திற்கு முன்பாக இருந்த மாளிகைவரை அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாக இருந்தது.
அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், தனிப்பட்ட இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
தனிப்பட்ட இடத்தின் பின்பக்கமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த நடையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாக இருந்தது.
வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைபந்தல்களும் சுற்றிலும் தரை துவங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.
வாசலின் மேலேதுவங்கி ஆலயத்தின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் சுற்றிலும் சுவரின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; ஒரு கேருபீனுக்கும் மற்றொரு கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.
பேரீச்சமரத்திற்கு இந்தபக்கத்தில் மனிதமுகமும், பேரீச்சமரத்திற்கு அந்த பக்கத்தில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.
தரை துவங்கி வாசலின் மேல்பக்கம்வரை, தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது.
தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்திற்குச் சரியாக இருந்தது.
மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாக இருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.
வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.
சுவர்களில் செதுக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; வெளியே மண்டபத்தின் முன்பாக மர கூரை வைத்திருந்தது.