“நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார்” என்றான்.
“உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,
தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான்.
பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.
நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.
பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: “பாருங்கள், யெகோவா யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,
அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான்.