இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 வருடத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நான்காம் வருடம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சமமாக 30 அடி நீளமும், ஆலயத்திற்கு முன்னே 15 அடி அகலமுமாக இருந்தது.
அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி இடச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுச்சுவரைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
கீழே இருக்கிற சுற்றுச்சுவர் 7.6 அடி அகலமும், நடுவே இருக்கிறது 9 அடி அகலமும், மூன்றாவதாக இருக்கிறது 10.6 அடி அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான்.
ஆலயம் கட்டப்படும்போது, அது வேலைசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான்.
அவன் 7.6 அடி உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
நீ என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நீதி நியாயங்களை நிறைவேற்றி, என்னுடைய கற்பனைகளின்படியெல்லாம் நடந்துகொள்ளும்படி, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு சொன்ன என்னுடைய வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தரை துவங்கி சுவர்களின் மேற்கூரைவரை, கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையால் செய்து, ஆலயத்தின் தரையை தேவதாரு மரங்களின் பலகைகளால் தரையை மூடினான்.
மூடப்பட்ட தரைதுவங்கி சுவர்களின் மேற்கூரைவரை ஆலயத்தின் பக்கங்களைத் தொட்டிருக்கிற 30 அடி நீளமான மறைப்பையும் கேதுரு பலகைகளால் செய்து, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதியினிடமாகக் கட்டினான்.
ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்கூட காணப்படாமல் எல்லாம் கேதுரு மரமாக இருந்தது.
யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்திற்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தினான்.
மகா பரிசுத்த ஸ்தலம் முன்புறம்வரை 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமுமாக இருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.
ஆலயத்தின் உட்புறத்தை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.
இப்படி ஆலயம் முழுவதும் கட்டிமுடியும்வரை, அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் 15 அடி உயரமுமாக இருந்தது.
கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை 7.6 அடி கேருபீனின் மற்ற இறக்கை 7.6 அடியாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை 15 அடியாக இருந்தது.
அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் இறக்கைகள் விரித்திருந்ததால், ஒரு கேருபீனின் இறக்கை ஒரு பக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் இறக்கைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளேயும் வெளியேயுமாகக் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது.
ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பனை மரங்களிலும் பொன்பதியத்தக்கதாகப் பொன்தகட்டால் மூடினான்.
இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைக்கால்களைச் செய்தான்; அது சுவர் அளவில் நான்கு பக்கமும் ஒரே அளவு சதுரமாக இருந்தது.
அதின் இரண்டு கதவுகளும் தேவதாருப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.
அவைகளில் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சமமாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.